இயர்போன்களை நீண்ட நேரம் அதிக சத்தத்தில் பயன்படுத்துவது பல பல்வேறு மூளை தொடர்பான மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இப்போது எல்லோரிடமும் பார்க்கக்கூடிய ஒன்று தான் இயர்போன். பஸ்ஸில் பயணிக்கும் போது, நடைபயிற்சி செய்யும் போது, வேலை செய்யும் போது கூட சிலர் இயர்போன் அணிந்து பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இது ஒரு சாதாரணமான விஷயமாக தோன்றலாம். ஆனால் உண்மையில் இது நம்முடைய காதுகளுக்கு மட்டுமல்ல, நரம்புகள் மற்றும் மூளைக்கும் கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மிகவும் அதிக நேரம் இயர்போன் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
காதுகளில் நரம்புகள் மிக மெல்லியதாக இருக்கின்றன. அதிக சத்தத்தில் பாட்டு அல்லது வீடியோக்கள் தொடர்ந்து கேட்டால், அந்த நரம்புகள் மெதுவாக பாதிக்கப்பட ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் நாம் சத்தங்களை சரியாகக் கேட்க முடியாமல் போய்விடும். இயர்போன் நெருக்கமாக காதில் பொருத்தப்படும். இதனால் அவ்வப்போது அழுத்தம் ஏற்பட்டு, சிலருக்கு தலைவலி, காதுவலி போன்றவை ஏற்படலாம்.

இயர்போன்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது அதில் எண்ணெய், தூசி, பாக்டீரியா சேர்ந்து காதுகளில் தொற்று ஏற்படுத்தும். இது காது வீக்கம், புண் ஆகியவற்றை ஏற்படுத்தும். சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் சொல்வது என்னவென்றால், இயர்போன்களில் அதிக சத்தத்தில் நீண்ட நேரம் இசை கேட்டால், அது நரம்புகள் வழியாக மூளையை பாதிக்க வாய்ப்பு உள்ளது. இது நினைவு குறைபாடு, கவன குறைபாடு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

சிறு வயது குழந்தைகள் இயர்போனை அடிக்கடி பயன்படுத்தினால், அவர்களது நரம்பியல் வளர்ச்சி பாதிக்கப்படும். மருத்துவக் கணிப்புகளின்படி 3 முதல் 5 சதவீதம் வரை அவர்களுக்குப் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. சிலர் தொடர்ந்து இயர்போன் பயன்படுத்துவதால், காதுகளில் எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போலவே தோன்றும். இது ஒரு மருத்துவப் பிரச்சனையாக மாறும்.

சத்தம் மிகுந்த இடங்களில் நாம் இயர்போன் அடிக்கடி பயன்படுத்தி பழகியிருந்தால், பிறர் பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாமல் போகும். சில நேரங்களில் காதுகளில் ஏதாவது அடைத்து விட்டது போலவும் தோன்றும். அதேபோல், மிகவும் மென்மையான சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போகும் நிலை உருவாகும்.

இயர்போன்களை ஒரு நாளில் அதிகபட்சம் 60 நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், சத்தத்தை 60 சதவீதத்திற்கு மேல் வைத்துக் கேட்டால், அது காதுகளை தீவிரமாக பாதிக்கும். பெருமளவு மக்கள் இருக்கும் இடங்களில் இயர்போனை தவிர்த்து, இயற்கையின் சத்தங்களை அனுபவிக்க முயற்சி செய்ய வேண்டும். வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் இயர்போனை பயன்படுத்தாமல், காதுகளுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. எந்தவொரு நாளிலும் காதுகளில் வலி அல்லது சத்தம் கேட்க முடியாத பிரச்சனை ஏற்படுகிறதானால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இயர்போன் ஒரு பயன்பாட்டு சாதனம் தான். ஆனால் அதை ஓர் அடிமைப் பழக்கமாக மாற்றிக்கொள்வது மிகவும் ஆபத்தானது. பாடல் கேட்பது நம்மை மகிழ்விக்கும். ஆனால் அதே மகிழ்ச்சி நம்முடைய உடல்நலத்தையே கெடுக்கக் கூடாது. எனவே, இயர்போனை குறைவாக, பாதுகாப்பாக பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.

Read more அரசுப் பேருந்துக்கு முன்னால் வேகமாக கழன்று ஓடிய சக்கரம்..!! பயத்தில் அலறிய பயணிகள்..!!