குழந்தைகளின் வாழ்க்கையை அழிக்கும் மிகப்பெரிய சமூக பிரச்சனைகளில் ஒன்று குழந்தை திருமணம். பெண்களுக்கு 18 வயதுக்கும், ஆண்களுக்கு 21 வயதுக்கும் குறைவாக நடக்கும் திருமணங்கள் குழந்தை திருமணமாகும். இது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களைத் தடுக்கும் வகையில் அம்மாவட்ட ஆட்சியர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், குழந்தை திருமணங்களை நடத்துவது, நடத்த தூண்டுவது அல்லது இதில் பங்கேற்பது என அனைத்தும் சட்டப்படி குற்றமாகும். இதைச் செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இதற்கிடையே அனைத்து திருமண மண்டபங்கள், கோவில்கள் மற்றும் திருமணம் நடத்தும் இடங்களில், மணமக்கள் தங்களின் ஆதார் அட்டை மூலமாக பிறந்த தேதி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவை சரிபார்க்கப்பட்ட பின்பே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அதோடு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குழந்தை திருமணம் ஏற்படுத்தும் தீங்குகளை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடப்பதை யாராவது அறிந்தால் உடனடியாக புகார் செய்யலாம். புகார் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். இதற்காக திருப்பூர் கலெக்டர் அலுவலகம் (அறை எண் 35), மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (அறை எண் 705) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், சைல்டுலைன் 1098 மற்றும் பெண்கள் உதவி மைய எண் 181 ஆகிய அவசர எண்களுக்கும் புகார் அளிக்கலாம். குழந்தைகள் சிறுவயதில் திருமணம் செய்து கொள்வது அவர்களின் கல்வி, உடல்நலன் மற்றும் எதிர்கால வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். எனவே இது ஒரு சமூகத்துக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அனைவரும் விழிப்புடன் இருந்து குழந்தை திருமணங்களைத் தடுக்கும் பணியில் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : தங்க நகைகளை அடகு வைக்க புதிய கட்டுப்பாடு..!! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் எளிய மக்கள் அதிர்ச்சி..!!