செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவரது லாரி கட்டுமானப் பொருட்களுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது, பாஸ்டேக் கார்டில் போதிய பணம் இல்லாததால் சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் ஓரமாக நிறுத்தப்பட்டது. ஓட்டுநர் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு ரீசார்ஜ் செய்ய காத்திருந்த சமயத்தில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென லாரியை இயக்கி அதிவேகமாக சென்னையை நோக்கி ஓட்டிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் அருகில் இருந்த காவலரிடம் புகாரளித்தார். உடனடியாக போலீசார் வாக்கி டாக்கி மூலம் மற்ற போலீசாரிடம் தகவலை கூறினார். மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தடுப்புகள் வைத்து லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. சில போலீசார் இருசக்கர வாகனத்தில் லாரியை பின் தொடர்ந்தனர். அப்போது, சிறப்பு காவல் ஆய்வாளர் பாலமுருகன், இருசக்கர வாகனத்தில் லாரியை விரட்டிப் பிடித்து, லாரியில் ஏறி தொங்கியபடியே, சுமார் 5 கிலோமீட்டர் பயணம் செய்தார்.

பின்னர் லாரியின் வேகம் குறைந்த நிலையில், மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே லாரி தடுப்பில் மோதி நின்றது. இதையடுத்து, அந்த நபர் தப்பிக்க முயன்ற நிலையில், போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த பரபரப்பான சேசிங் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார், அந்த மர்ம நபரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Read more கொட்டித் தீர்க்கும் கனமழை!. சேலத்தில் வீடுகள் இடிந்து சேதம்!. சுரங்கப் பாதையில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்!. வாகன ஓட்டிகள் அவதி!.