இரண்டு இளம்பெண்கள் அடுத்தடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இதுவரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் ராயக்கோட்டை அருகே மாதரசனப்பள்ளியை சேர்ந்த 19 வயது மாணவி, பாலக்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியேறிய இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் சூளகிரி போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “ஓசூர் பத்தளப்பள்ளியில் காய்கறி கடை வைத்திருக்கும் 22 வயதான சக்திவேல் என்ற நபர் எங்கள் மகளை ஏமாற்றி கடத்தி சென்றிருக்கலாம்” என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், சூளகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதேபோல், ராயக்கோட்டை அருகே உள்ள சூளக்குண்டா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-1 வரை படித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “ஓசூரை சேர்ந்த அசேன் என்ற நபருடன், எங்கள் மகள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஆசை வார்த்தைகள் கூறி, எங்கள் மகளை தவறான வழியில் அழைத்துச் சென்றிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராயக்கோட்டை போலீசாரும் இந்த புகாரை முக்கியமாக எடுத்துக்கொண்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு இளம் பெண்கள் காணாமல் போன சம்பவங்கள், பெற்றோர்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எங்கே சென்றுள்ளனர்? யார் அவர்களை அழைத்துச் சென்றனர்? என்பதை போலீசார் விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.