ஓட்டல் உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து, அவரிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் குமாரபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அய்யன் தோட்டம் பகுதியில் வசிக்கும் மாதேஸ்வரன் என்பவர் (வயது 56), ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், சமையல் உதவியாளராக பணியாற்றும் வேம்பு என்பவருடன் தனது இருசக்கர வாகனத்தில் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருள் சூழ்ந்திருந்த நேரத்தில், திடீரென ஒருவர் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். இதில் நிலைதடுமாறி மாதேஸ்வரனும், வேம்புவும் கீழே விழுந்தனர். அப்போது, அந்த மர்மநபர் மாதேஸ்வரனை தாக்கி, அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். மாதேஸ்வரன் 6 பவுன் தங்க சங்கிலி அணிந்திருந்த நிலையில், அதில் ஒரு பகுதியை அவர் பிடித்துக் கொண்டதால் 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றான்.
இச்சம்பவத்தை அடுத்து, மாதேஸ்வரன் உடனே குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, டி.எஸ்.பி. தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : மண்ணுக்குள் இருந்து கேட்ட சத்தம்!. உயிருடன் புதைக்கப்பட்ட சிசு!. நர்சிங் மாணவியின் பகீர் செயல்!