தங்கையுடன் சேர்ந்து மாமியாரை, அவரது மருமகளே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வீரப்பன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் முகமது மற்றும் மைமூனா என்ற தம்பதி. முகமது, தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியாளராக வேலை செய்கிறார். மே 16ஆம் தேதி மாலை, அவர் வீட்டில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, அன்றைய தினம் முகமது வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன் கதவு உள்ளே பூட்டி இருந்தது. இதனால் பின் வாசல் வீட்டுக்குள் நுழைந்தபோது, சமையலறையில் மைமூனா ரத்தத்தில் மூழ்கி இறந்திருந்தார். இதைப் பார்த்து முகமது அழுதார்.

இதையடுத்து, உறவினர்கள் உதவியுடன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மை மூனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மை மூனாவின் மருமகள் கைருநிஷா மற்றும் அவரது தங்கை அஸீனா மீது சந்தேகம் வந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து தங்க நகைகள் திருட, மாமியாரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “அஸீனா வின் கணவர் நிஜாமுதீன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளார். அவரை ஜாமீனில் வெளியே எடுக்க பணம் தேவைப்பட்டது. இதற்காக, மாமியாரிடம் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போனை பறிக்கவே, கைருனிஷா மற்றும் அஸீனா இணைந்து இந்த கொலை செய்தனர்.”

அவர்கள், “மைமூனாவின் கழுத்தை நெரித்ததும், பின்னர் குக்கரின் மூடியால் தலையில் தாக்கியும் கொடூரமாக கொன்றுள்ளனர்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கைருநிஷா (வயது 33) மற்றும் அஸீனா (வயது 30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more கரண்ட் பில் விவகாரத்தில் கடுப்பான மின்வாரிய ஊழியர்கள்..!! திடீரென மின் இணைப்பை துண்டித்ததால் அடுத்தடுத்து இறந்துபோன 14,000 கோழிகள்..!!