பழைய வீட்டில் வசிப்பவர்கள், அதை மறுகட்டுமானம் செய்ய நினைத்தால், அதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்குவது பற்றி உங்களுக்கு தெரியுமா..? “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” என்ற திட்டத்தின் மூலம் பயனாளிகள் பலன் பெறலாம். இதில் முழுமையாக சேதமடைந்து, பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ள வீடுகளை ரூ.2,40,000 லட்சம் செலவில், 210 சதுர அடி பரப்பளவில் புதிதாகக் கட்டலாம். முன்னதாக கட்டப்பட்ட வீடுகள் 210 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருந்ததாலும், பயனாளிகளுக்கு சொந்தமான இடம் இந்த பரப்பளவே இருக்கும் என்பதாலும், 210 சதுர அடிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

2000-2001 ஆம் ஆண்டு வரை IAY, THADCO, பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்று பல்வேறு அரசுத் திட்டங்களின்கீழ் கட்டப்பட்டு, தற்போது பழுதுபார்க்க முடியாத நிலையில் இருக்கும் ஓடுகள் மற்றும் சாய்தள கான்கீரிட் கூரை கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மறுகட்டுமானம் செய்ய வேண்டிய வீடு, பயனாளியின் பெயரில் அரசுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது ஒதுக்கப்பட்ட பயனாளி இறந்திருந்தால், பயனாளியின் சட்டப்பூர்வ வாரிசு அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் வீட்டைத் தவிர, தனது பெயரில் சொந்தமாக கட்டப்பட்ட அல்லது பல்வேறு அரசு வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டை சொந்தமாகக் கொண்டிருக்கக் கூடாது. விற்கப்பட்ட வீடுகள், வாடகைக்கு விடப்பட்ட வீடுகள், சட்டப்பூர்வமற்ற வாரிசுகள் வசிக்கும் வீடுகள் இத்திட்டத்தின்கீழ் மறுகட்டுமானத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. ஓய்வுபெற்ற அல்லது பணிபுரியும் அரசு ஊழியர்களுக்குச் சொந்தமான வீடுகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர் அல்லது அவர்களது வாழ்க்கைத் துணை ஆகியோரின் வீடுகள் இந்தத் திட்டத்தின்கீழ் வராது.

தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..?

தகுதியான பயனாளிகளின் பட்டியலை tnrd.gov.in என்ற இணையதளத்தில் உள்ள “RRH Survey” என்ற தளத்தில் பயனாளிகளின் விவரங்கள் இருக்கும். வட்டார அளவில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இதை பதிவிறக்கம் செய்து பயனாளிகளின் தகுதி குறித்து கள ஆய்வு செய்ய வேண்டும். பயனாளிகளின் தகுதியை மதிப்பிடுவதற்காக, குழுவும் நிர்ணயிக்கப்படும். இந்தக் குழு அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்து, தகுதியான பயனாளியை பரிந்துரைக்கும். பயனாளிகளின் இறுதிப் பட்டியல் கிராம சபையில் ஒப்புதலுக்காக வைக்கப்படும். வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்காக 4 தவணைகளில் தொகை வழங்கப்படும். அடித்தள நிலையை அடைந்த பிறகு முதல் தவணை, லிண்டல் கான்கிரீட் அமைக்கும் கட்டத்தில் இரண்டாவது தவணை, மேற்கூரை கான்கிரீட் அமைக்கும்போது மூன்றாவது தவணை மற்றும் பணி முடிந்த பிறகு நான்காவது தவணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.