எடப்பாடி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி ஸ்டீல் பிளாண்ட் எதிரே வசித்து வருபவர் தங்கவேல். இவரது மகன் மாதேஷ். இவரது குடும்பத்தினர் நேற்று காலை வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர், மதியம் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்ட நிலையில், இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த ரூ.10,000 பணத்தை காணவில்லை.

இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் அய்யண்ணன் என்பவரது மகன் சௌந்தரராஜன் மற்றும் அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் நேற்றைய தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.3,500 மாயமானது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடியுள்ளனர்.

அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த பூமாலை என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த மூன்றரை சவரன் நகை மற்றும் ரூ.6,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த தொடர் திருட்டு சம்பவம் குறித்து சங்ககிரி டிஎஸ்பி சிந்து, பூலாம்பட்டி இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ’சம்பள காசை திருடாதே.. ஏழைகள் வயிற்றில் அடிக்காதே’..!! 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு..!! தேவூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!