பவானி ஊராட்சிக் கோட்டை நீர் மின்தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கடல் போல் காட்சி அளித்த காவிரி, தற்போது பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதனால் தினசரி 13 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர் நீர்மின்தேக்க நிலையம், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக் கோட்டை உள்ளிட்ட நீர் மின்தேக்க நிலையங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீர்மின் தேக்க கதவணைகள் ஒவ்வொன்றாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு 15 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாகும்.
இதையடுத்து, தேவூர் அருகே ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணை பகுதியில் அனைத்து கதவணை மதகுகளும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் திறந்து தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தினசரி 13 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும், நீர்த்தேக்க பகுதிகளான வேலாத்தாகோவில், இராமக்கூடல், புளியம்பட்டி, பரிசல் துறை, புள்ளாக்கவுண்டம்பட்டி , அண்ணமார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது.
இதனால் குறைவான தண்ணீர் உள்ள பாறை இடுக்குகளில் இருக்கும் மீன்களை சிறுவர்கள் இளைஞர்கள், ஆர்வமுடன் பிடித்து வருகின்றனர். மேலும், நீர்த்தேக்க பகுதிகளில் கடல் போல் காட்சி அளித்த காவிரி தற்போது பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது. இந்த பராமரிப்பு பணி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுவதால், நீர்தேக்க பகுதிகளில் உள்ள விவசாய வயல்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இராமக்கூடல் காவிரி ஆற்றில் இருந்து திருச்செங்கோடு பகுதிகளுக்கு செல்லும் குடிநீர், புள்ளாக்கவுண்டம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து சங்ககிரி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் மற்றும் காவேரிப்பட்டி காவிரி ஆற்றில் இருந்து தேவூர் பேரூராட்சி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.