முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் இதை செய்துவிட்டால் நான் அரசியலை விட்டே போயிடுறேன் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணி சார்பாக புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நமது நாட்டில், பாஜக ஆட்சிக்கு வந்த பின், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 31% சிறுபான்மையின மக்கள் வீடு கிடைக்கப் பெற்றுள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டத்தில் 36% சிறுபான்மையின மக்கள் பயனடைந்துள்ளனர்.
விவசாயிகள் கௌரவ நிதி பெற்றவர்களில் 33% சிறுபான்மையினர் தான். உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்தவர்களில் 37% சிறுபான்மையினர் தான். மேலும், சிறுபான்மையின பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வி முடித்ததும் ரூ. 51,000 நிதியுதவி, பிரதமர் மோடி ஆட்சியில் வழங்கப்படுகிறது. ஆனால், திமுக சிறுபான்மையின மக்களுக்காகக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன..? சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் எங்கேயாவது எதிராக இருந்துள்ளோமா என்று யோசித்துப் பாருங்கள்” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “பல நாடுகளில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலினிடம் இந்திய வரைபடத்தை கொடுத்து, மணிப்பூர் எங்கிருக்கிறது என்று தொட்டுக் காட்ட சொல்லுங்கள். அப்படி செய்துவிட்டால், நான் அரசியலை விட்டே போயிடுறேன். அவருக்கு மணிப்பூர் எங்கு இருக்குன்னே தெரியாது. சத்தியமா தெரியாது” என்று விமர்சித்தார்.