தனது மச்சினிச்சி மீது ஆசைப்பட்டு, தாலிக்கட்டிய மனைவியை காரை ஏற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் நகரை சேர்ந்தவர் அங்கித் குமார். இவரது மனைவி கிரண். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால், தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். மேலும், இதற்கு தடையாக இருக்கும் மனைவி கிரணை, நண்பனின் உதவியோடு கொலை செய்துள்ளார் அங்கித்குமார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ”அங்கித் குமார் – கிரண் தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதனால், மச்சினிச்சி மீது ஆசைப்பட்டு, தனது நண்பர் சச்சின் குமாருடன் உதவியுடன் மனைவி கிரணை காரை ஏற்றிக் கொல்ல சதி செய்துள்ளார். ஆனால், படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த மார்ச் 8ஆம் தேதி தனது மனைவியை மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது சாலை விபத்தில் மனைவி இறந்துவிட்டதாக போலீசில் அங்கித்குமார் நாடகமாடியுள்ளார்.
அதாவது, பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையோரத்தில் கிரணை விட்டுச் சென்றதாகவும், அப்போது வேகமாக வந்த ஒரு கார் அவர் மீது மோதிவிட்டுச் சென்றதாகவும் அங்கித்குமார் போலீசிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியில், சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, கிரண் மீது காரை ஏற்றிச் சென்றது சச்சின் என்பதும், அவர் அங்கித்குமாரின் நண்பர் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை என்றும், இதனால், மச்சினிச்சியை திருமணம் செய்ய விரும்பியதாகவும் அங்கித்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.