கணவர் மற்றும் குழந்தையின் கண்முன்னே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர், தனது கணவருடன் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால், அந்த வேலை பிடிக்காததால், குடும்பத்துடன் மீண்டும் சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என நினைத்து, ரயில் ஏறுவதற்காக திருப்பூர் ரயில் நிலையம் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது, பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம், டானிஷ், முர்சித் ஆகிய 3 பேரும் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளனர். பின்னர், அவருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்.
இதை நம்பி, அந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர்களோடு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்குவதற்காக அந்த 3 இளைஞர்களும் தாங்கள் தங்கியிருந்த அறையை கொடுத்துள்ளனர். இதையடுத்து, 6 பேரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தான், அந்த 3 இளைஞரும் அப்பெண்ணின் கணவரைக் கட்டிப்போட்டு விட்டு அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
கணவன் மற்றும் குழந்தையின் கண் முன்னே கத்தியைக் காட்டி மிரட்டி 3 பேரும் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்து வந்த பெண்ணின் குடும்பத்தினர், இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்த 3 இளைஞர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.