தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என மாநில உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடங்கள் என அனைத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் பெண் காவலர் ஒருவர் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், சென்னை போக்குவரத்து காவல்துறையில் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வரும் மகேஷ் குமார், பாலியல் தொடர்பான அச்சுறுத்தலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதாவது,சமூக வலைதளம் மூலம் தனக்கு பாலியல் தொல்லை மற்றும் அடிக்கடி பரிசு பொருட்கள் கொடுத்து தொல்லை செய்ததாகவும், ஆதாரங்களோடு பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகார் அளித்ததையடுத்து, விசாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த குழு விசாரணை நடத்திவரும் நிலையில், மீண்டும் மகேஷ்குமார், மேலும் ஒரு பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது இரு பெண்களுக்கும் இரவுநேர பணி கொடுத்து பணிபுரியும் இடத்திற்கு சென்று பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

டிஜிபி சங்கர் ஜிவால் பரிந்துரையின்பேரில், விசாரணை மாநில உள்துறைக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து மாநில உள்துறை உத்தரவிட்டது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, எஸ்பிகளில் இருந்து ஐஜி வரை உள்ள காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக் கூடாது என்றும் தற்போது பெண் போலீசார் பணியில் இருந்தால் அவர்களை உடனடியாக வேறு பணிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களை தொடர்ந்து காவலர்களுக்கும் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: உங்கள் PAN Card ரத்து செய்யப்படலாம்!. புதிய வருமான வரி சட்ட விதிகளில் இப்படியொரு கட்டுப்பாடா?. முழுவிவரம் இதோ