தேர்வுக்கு தாமதமானதால், பாரா கிளைடிங்கில் கல்லூரிக்கு பறந்து சென்ற மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் வைய் தாலுகா பசராணி கிராமத்தை சேர்ந்தவர் சமர்த் மகான்காடே(19). இவர் சத்தாராவில் உள்ள பஞ்சகனி மலை பகுதியில் பாராகிளைடிங் சாசகப் போட்டி நடைபெற்றது. இதனை கண்டு ரசித்துக்கொண்டிருந்ததால், திட்டமிட்ட நேரத்துக்குள் அவரால் கல்லூரிக்கு புறப்பட முடியவில்லை. தேர்வு நடைபெற்றுக்கொண்டிருப்பதால், கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்று அவசர அவசரமாக புறப்பட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது மலைப்பகுதியில் உள்ள பாராகிளைடிங் சாகச விளையாட்டு குழுவினர் மாணவரை சரியான நேரத்துக்கு கல்லூரிக்கு கொண்டு செல்ல உதவுதாக கூறினர். அவர்கள் பாராகிளைடிங் மூலம் மலைக்கு கீழே உள்ள பகுதியில் இறக்கிவிடுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பாராகிளைடிங் குழுவை சேர்ந்த ஒருவர், உரிய பாதுகாப்பு முன் எச்சரிக்கையுடன் மாணவரை பாராகிளைடிங் மூலம் பறக்க செய்து மலைப்பகுதிக்கு கீழே இறக்கிவிட்டார். இதனால் மாணவரும் சரியான நேரத்தில் கல்லூரிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 35 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் அந்த வீடியோவை பார்த்து உள்ளனர். மேலும் பாரா கிளைடிங் சாகச விளையாட்டு குழுவை சேர்ந்த அந்த நபருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.