எடப்பாடியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் மாணவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தாவாந்தெருவில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கந்தகுரு ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கந்தகுரு வழக்கம்போல் பிப்ரவரி 10ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் பள்ளிப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, ஜன்னல் இருக்கையில் அமர்வது தொடர்பாக மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், 7ஆம் வகுப்பு மாணவன், கந்தகுருவை அடித்து பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில், நிலைகுலைந்துபோன கந்தகுருவை உடனடியாக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், உயிரிழந்த மாணவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தனியார் பள்ளி வளாகத்தின் முன் சூழ்ந்ததால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதனால், தனியார் பள்ளிக்கு அசம்பாவிதம் நிகழாவண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், அவரை தாக்கிய சக மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசாரின் விசாரணை முடிவிலும், பிரேத பரிசோதனை முடிவிலும் மாணவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
Readmore: சேலத்தில் பகீர்!. சொத்துக்காக தாய், தந்தையை சரமாரியாக வெட்டிய மகன்!. தீவிர விசாரணை!