தைப்பூச திருவிழா முருக பெருமான் கோவில்களில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடு கோவில்களில் தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பழனி, திருச்செந்தூர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோயிலில் குவிந்துள்ளனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி பட்டக்காரனூரில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் பக்தர்கள் மாலை அணிவித்து பழனி முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று (பிப்.10) ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் இருந்து காவிரி ஆற்றுக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் செய்து பூமணியூர், செங்கானூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர்கள் வழியாக பாலமுருகன் திருக்கோயிலுக்கு வந்தடைந்தது.

அதேபோல், இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்.18ஆம் தேதி மாலை அணிவித்த பக்தர்கள் காவடியுடன் பழனி முருகன் கோயிலுக்கு செல்ல உள்ளனர்.

Read More : பழனி முருகன் கோயிலில் எடப்பாடி பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு வழிபாட்டு உரிமை..!! இந்த வரலாறை தெரிஞ்சிக்கோங்க..!!