3 முறை தலைநகரை ஆண்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களிலும், ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. டெல்லியில் தனித்து ஆட்சியை பிடிக்க தேவையான பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வென்றால் போதும். தற்போது பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. அதோடு தலைநகர் டெல்லி இப்போது பாஜக வசமாகி உள்ளது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட பல முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். முதல்வராக உள்ள அதிஷி போராடி வெற்றி பெற்றுள்ளார். டெல்லி முதலமைச்சர் அதிஷி, கல்காஜி தொகுதியில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி மற்றும் காங்கிரஸின் அல்கா லம்பாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.

இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ஆம் ஆத்மி கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தான் என்று கூறப்படுகிறது. அதாவது கடந்த 2012ல் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. அப்போது ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வரக்கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் முக்கிய நபராக இருந்தவர் தான் அரவிந்த் கெஜ்ரிவால்.

அதன்பிறகு அவர் 2012ல் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். ஊழலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. 2013 சட்டசபை தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி களமிறங்கியது. 32 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. 2வது பெரிய கட்சியாக 28 தொகுதிகளில் வென்ற ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியை பிடித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல் முறையாக முதல்வரானார். அதன்பிறகு 49 நாட்களில் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார்.

அதன்பிறகு 2015, 2020 சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி தொடர்ந்து மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தோல்வியடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆம் ஆத்மி கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தான். அதாவது டெல்லியில் கடந்த 2011ல் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது. இதில் லஞ்சமாக பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. தொழிலதிபர்களிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதுபற்றி சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ராஜ்யசபா எம்பியான சஞ்சய் சிங், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி தோல்வியை அடுத்து டெல்லி தலைமைச் செயலகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கணினி, ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவற்றையும் பத்திரமாக வைத்திருக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர்களின் அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் உத்தரவைத் தொடர்ந்து பொது நிர்வாகத் துறையின் அனுமதியின்றி, தலைமைச் செயலகத்துக்குள் யாரும் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: குலாப் ஜாமூன் பாத்திரத்தில் சிறுநீர் கழித்த சமையல்காரர்!. வைரல் வீடியோ!. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!.