மேச்சேரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் உடலை யாருக்கும் தெரியாமல் பெற்றோர்கள் எரிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அங்கமுத்து நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் 22 வயது திவ்ய கங்கா. சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி 2ம் ஆண்டு படித்துவரும் இவர், நேற்று முன் தினம் காலையில் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்ற பெற்றோர்கள் திவ்யா, மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பெற்றோர்களும் உறவினர்களும் சேர்ந்து மாணவியின் உடலை யாருக்கும் தெரியாமல் தர்மபுரி மாவட்டம் கம்மம்பட்டி கல்லூரி கோம்பை கிராமத்திற்கு எடுத்து சென்று எரிக்க முயன்றனர்.
இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த மாணவியின் உடலில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெற்றோர் மற்றும் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எதற்காக மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் உடலை ஊரை விட்டு வேறு ஊருக்கு எடுத்து சென்று எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.