எடப்பாடியில் சொத்துகளை அபகரிக்க திட்டமிட்டு உயிரோடு இருக்கும் கணவர் இறந்துவிட்டதாக கூறி போலி இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ரேவதி. தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக தம்பதிகள் இருவரும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திடீரென தனது கணவரை காணவில்லை என்று கூறி எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ரேவதி. இதையடுத்து, கணவர் இறந்துவிட்டதாக கூறி மீண்டும் ஒரு புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதாவது, விஜயகுமார் பெயரில் உள்ள சொத்தகளை தனது பெயருக்கு மாற்றிக்கொள்ள திட்டமிட்டு போலி இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
இதையடுத்து, எடப்பாடி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமார் உயிரிழந்து விட்டாரா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர் உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் மனுதாரர் ரேவதியையும், இறந்து விட்டதாக கூறப்பட்ட அவரது கணவர் விஜயகுமாரையும் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்த வட்டாட்சியர் வைத்தியலிங்கம், விசாரணை மேற்கொண்டு போலியான இறப்புச் சான்றிதழ் வழங்கியதை கண்டறிந்து, ரேவதியை எடப்பாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, கணவர் அளித்த புகாரின் பேரில் மனைவி ரேவதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.