குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளை முட்டியதில் சேலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 9-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு விளையாட்டு வளையக்காரனூர் காவேரி உயர் தொழில்நுட்ப பூங்கா முன்பு உள்ள மைதானத்தில் நேற்று நடந்தது. ஜல்லிக்கட்டை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகி ராஜசேகர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 540 காளைகள் கலந்து கொண்டன. சுமார் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 80 வீரர்கள் வீதம் 5 சுற்றுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து, வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமுடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதையடுத்து வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசு, மிக்சி, கிரைண்டர், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில், சீறிப்பாய்ந்த காளையை சேலம் தலைவாசல் பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (வயது 24) என்பவர் அடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக காளையின் கொம்பு இளைஞரின் தொண்டையில் குத்தி கிழித்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இளைஞரை உடனடியாக மீட்கப்பட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: ”படிக்குற வயசுல காதல் கேக்குதா”..? முட்டை பொரியலில் எலி மருந்து..!! ஆசையாக சாப்பிட்ட மகள்..!! தாய் சொன்னதை கேட்டதும் மயங்கி விழுந்த மாணவி..!!