எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண்ணை காரில் கடத்திச்சென்ற சம்பவத்தில் தாய், தந்தை உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி கிராமம் சின்னதாண்டவனூரை சேர்ந்தவர் தனுஷ்கண்டன் (25). ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கும், அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் பென்னாகரம் சின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோஷினிக்கும் (22) காதல் ஏற்பட்டது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு பெண்ணின் பெற்றோர்கள் பிடிவாதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆன நிலையில் அந்த பெண் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில், கடந்த கடந்த 2 நாட்களுக்கு முன், தனுஷ் வீட்டில் இருந்த இளம்பெண்ணை மர்ம கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஷ் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரை கண்டுப்பிடித்தனர். கடத்தப்பட்ட ரோஷினியையும் மீட்டு கணவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இளம்பெண்ணை அடியாட்களை வைத்து கடத்த முயன்றது அவரது தந்தை தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண்ணின் தந்தை குமார செல்வம், தாய் சித்ரா, பெரியப்பா லட்சுமணன், அக்கா சௌமியா, குமாரசெல்வத்தின் நண்பர் வெங்கடாசலம், மந்திரவாதி கருப்பண்ணன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Readmore: கரண்ட் பில் செலுத்துவோருக்கு குட் நியூஸ்..!! இனி மாதந்தோறும் மின் கட்டணம்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பு..!!