எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, கர்ப்பிணி என்றும் பாராமல் காரில் கடத்திச்சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி கிராமம் சின்னதாண்டவனூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தனுஷ்கண்டன் (25). ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கும், அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் பென்னாகரம் சின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோஷினிக்கும் (22) காதல் ஏற்பட்டது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, எடப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் தம்பதியின், பெற்றோர்களை வரவழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆன நிலையில், ரோஷினி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தனுஷ் வீட்டில் இருந்த ரோஷினியை, நேற்று மாலை நேரத்தில் காரில் வந்த மர்ம நபர்கள் தர தரவென வெளியே இழுத்து வந்து கடத்திச்சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த தனுஷ், அவர்களை தடுக்க முயன்றபோது கத்தியை காட்டி மிரட்டி, காரில் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.
தனுஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட எடப்பாடி காவல்துறையினர், காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரை கண்டுப்பிடித்தனர். கடத்தப்பட்ட ரோஷினியையும் மீட்டு கணவர் குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளனர். இந்த வழக்கில், முதற்கட்டமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.