சேலத்தில் கல்லூரி இளைஞர்களை குறிவைத்து அதிகளவில் போதை ஊசி பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், அரசியல் மற்றும் திரையுலக தொடர்புகளை பயன்படுத்தி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொழிலை நடத்தி வந்த கதைகள் ஒவ்வொன்றாக அம்பலமானது. அதுமட்டுமின்றி, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை ஊசி, போதை மாத்திரைகள், ஹெராயின், மெத்தாம்பேட்டமைன், கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்தி சிறுவர்களும் இளம் தலைமுறையினரும் சீரழிந்து வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாநகரத்தில் மெடிக்கல்களில் விற்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் போதைக்காக அதிகளவில் பயன்படுத்தி வருவதாகவும், இந்த மாத்திரைகளை விற்பதற்கென தனி நெட்வொர்க் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் அந்த கும்பல், தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ”இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பல் அனைவரும் சேலம் மாநகர எல்லைக்கு தான் இருக்கின்றனர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், வெளியில் வந்த பின் மீண்டும், அதே வேளையில் தான் ஈடுபடுகின்றனர். இந்த கும்பல் சிக்கும்போது ஏகப்பட்ட மருந்துக்கடை வியாபாரிகள், மருந்து விற்பனையாளர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனம் பேன்றவை அடுத்தடுத்து சிக்கியும் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
”போதைப்பொருள்கள் பயன்படுத்தும் கும்பலை கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம். அதில், முக்கிய தலைகள் விரைவில் பிடிபட வாய்ப்புள்ளது. மருந்தகங்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படும் மாத்திரைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். அதன் மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.