பட்டப்பகலில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பிக்கொண்டிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் எஸ்பிஐ ஏ.டி.எம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று இயந்திரத்தில் பணம் நிரப்ப ஊழியர்கள் வேனில் சென்றுள்ளனர். பணம் நிரப்புவதற்காக ஊழியர்கள் வேனில் இருந்து பணப்பெட்டியை இறக்கினர். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த கொள்ளையர்கள் ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவத்தில் கிரீஷ் வெங்கடேஷ் மல்லப்பா என்ற வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிவக்குமார் என்ற ஊழியர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, கொள்ளையர்கள் ரூ.93 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த சிவக்குமாரை மீட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையின் கூற்றுப்படி ஏடிஎம்களில் பணத்தை ஏற்றுவதற்கும் பொறுப்பான தனியார் ஏஜென்சியான சிஎம்எஸ் ஊழியர்கள், எஸ்பிஐ கிளையிலிருந்து காலை 10.30 மணியளவில் தங்கள் வாகனத்தில் பணப் பெட்டியை மாற்றும்போது அவர்களை குறிவைத்து கொள்ளையர்கள் துப்பாக்கிச்சுடு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் ஊழியர்கள் மீது மிளகாய்ப் பொடியை வீசியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Readmore: தீராத பல் வலியா?. பல் கூச்சம் ஏற்படுவதை தடுத்து நிவாரணம் அளிக்கும் வீட்டு வைத்தியங்கள்!.