சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கி தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். அப்போது முதல் இக்கட்சி பல்வேறு தேர்தல் களங்களை கண்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தை பெற்று வருகிறது. இருந்தும் மாநில கட்சி அங்கீகாரம் பெரும் அளவுக்கு வாக்கு சதவீதத்தை எட்ட முடியாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 விகித வாக்கு சதவீதத்தை ஒட்டுமொத்தமாக பெற்றது. தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சி 8 சதவீத வாக்கிற்கு மேல் பெற்றால் அக்கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
அதன்படி, நாம் தமிழர் கட்சியை ஒரு மாநில கட்சியாக அங்கீகாரம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு வெளியிட்டுள்ளது. அதேநேரம் நாம் தமிழர் கட்சி கேட்டிருந்த நிலத்தில் உழவு செய்யும் விவசாயி, புலி சின்னங்களை தர முடியாது எனவும் அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள வேறு ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.கடந்த 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு பெற முடியாமல் பிறகு மைக் (ஒலிவாங்கி) சின்னத்தை பெற்று தேர்தலில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.