ஒரு காலத்தில் ரூபாயின் மதிப்பு உயர்ந்து, மிகக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைத்தன. தற்போது 1 ரூபாயின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், அந்த காலத்தில் அதே ரூபாய்க்கு தங்கம் கிடைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..? உண்மையில் அந்தக் காலத்தில் தங்க நகை வாங்க ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும், எவ்வளவு நகை வேண்டுமானாலும் வாங்கலாம்.
அந்தவகையில், 1959ஆம் ஆண்டும் வாங்கப்பட்ட தங்க நகைக் கடையின் பில் ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் @upscworldofficial என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. இது 1959 காலகட்டத்தில் தங்கம் வாங்கப்பட்ட பில் ஆகும். 1 தோடா தங்கம் என்று அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்திய அளவீட்டு முறையில், 1 தோடா என்பது 11.664 கிராம் தங்கத்திற்கு சமம்.
அதேபோல, 1 சவரன் என்பது 8 கிராம் தங்கத்துக்குச் சமம். இந்த அலகுகள் பொதுவாக தென்னிந்தியாவில் தங்க நகைகள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை அளவிட பயன்படுத்தப்படுகின்றன . அந்தவகையில், 1959ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை தோராயமாக ரூ.10 முதல் 11 ரூபாய் வரையே இருந்துள்ளது. அந்த காலத்தில் தங்கம் வாங்கிய காசுக்கு, இன்று அந்த பணத்தை வைத்து ஒரு சாக்லேட் கூட வாங்க முடியாது.
தற்போது, 1 தோடா தங்கத்தின் மதிப்பு, 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது. மிக விரைவில் ஒரு லட்சத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 66 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தங்கத்தின் விலையை விட, இப்போது எத்தனை மடங்கு விலை உயர்ந்துள்ளது என்பதை நினைத்து மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இப்போது இருக்கும் தங்கம் வாங்கும் கனவு அப்போதே இருந்திருந்தால் ”நம்மள அடிச்சிக்க இங்க ஆளே இருக்க முடியாது” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Readmore: BREAKING | பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!