தனது நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியாரை மருமகளே கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் ராமன் – கோவிந்தம்மாள் தம்பதி. இவர்களது மகன் சிராலனுக்கு (35) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தேவிகலா (24) என்பவருடன் திருமணம் நடந்து முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், ராமன் – கோவிந்தம்மாளுக்கு ராஜேஸ்வரி மற்றும் ராஜலட்சுமி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். ராஜேஸ்வரி அதே கிராமத்திலும், ராஜலட்சுமி வேலூரிலும் திருமணமாகி கணவர் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ராமன் இறந்து விட்டதால், தாய் கோவிந்தம்மாள் மருமகள் தேவிகலாவுடன் வசித்து வந்துள்ளார். கோவிந்தம்மாளின் இரண்டு மகள்களான ராஜலட்சுமிக்கும், ராஜேஸ்வரிக்கும் இதுவரை குழந்தைகள் இல்லை. தனது மகன் சிராலன் ராணுவத்தில் உள்ள நிலையில், மருமகளுக்கு மட்டும் எப்படி குழந்தை பிறந்தது என சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தபோது, இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்றும் மாமியார் – மருமகள் சண்டை கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருமகள் தேவிகலா, மாமியாரை கழுத்தை நெரித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கோவிந்தம்மாள் மயக்கமடைந்துள்ளார். பின்னர், அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தம்மாளின் மகள் ராஜேஸ்வரியை தொடர்பு கொண்டு மாமியார் தடுக்கி விழுந்து மயக்கமடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, மருமகள் தேவிகலா, மகள் ராஜேஸ்வரி ஆகியோர் கோவிந்தம்மாளை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, கோவிந்தம்மாளின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவர் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் தேவிகலாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தேவிகலா மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : மீண்டும் லாக்டவுன்..? உலக நாடுகளுக்கு பயத்தை காட்டும் சீனா..!! HMPV வைரஸால் மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் கூட்டம்..!!