இந்தியாவில் 18 வயதுக்கு குறைவானவர்கள் சோஷியல் மீடியாவில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் பெற்றோரின் அனுமதி என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி. பல நன்மைகளையும் நல்கிக் கொண்டிருக்கிறது. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன. தனது குடும்பத்தைப் பிரிந்து சென்று அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி, நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர்.
பலர் வலைதளங்களில் இடும் புதிய பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைதளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதால் அப்பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும். அவர்கள் அப்பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அதனை தடுக்கும் வகையில், இந்தியாவில் தற்போது, 18 வயது உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர்கள் அனுமதி தேவை என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்குவதற்கு முன்னர் பெற்றோரின் ஒப்புதல் தேவை என்றும், இதனை சம்பந்தப்பட்ட வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதிக்கு பிறகு வரைவு விதிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபனைகளை MyGov இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.