விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுமி பலியான விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின் இரும்பு மூடி உடைந்ததில், அதன் மீது நின்று கொண்டிருந்த அக்குழந்தை, அதற்குள் விழுந்து இந்த சோக சம்பவம் நேரிட்டது. இதையடுத்து, குழந்தையை சிகிச்சைக்காக ஆசிரியர்கள் காரில் அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனியார் பள்ளியின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். குழந்தையின் சடலத்தை கைப்பற்றியதுடன், பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரொ, ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் 3 பேரை நள்ளிரவில் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.