சின்னசேலம் அருகே சோளக்காட்டில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திம்மாபுரம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கும், நிர்மலா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இந்த தம்பதிக்கு கனிஷ்கா (6), ஹரிணி (4) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் செந்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனது குழந்தைகளுடன் நிர்மலா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பால் சேகரிக்கும் நிலையத்தில் பாலை ஊற்றி விட்டு வீட்டிற்குத் திரும்பியவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இரவு முழுவதும் நிர்மலாவை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது தம்பி மணிவண்ணன் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது, அருகே உள்ள சோளக்காட்டில் அவர் பால் ஊற்றி வந்த பால் கேன்கள் மற்றும் காய்கறிகள் துப்பட்டா சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்து சற்று தூரத்தில் தனது அக்கா நிர்மலா இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதார்.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நிர்மலாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குமரேசன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று குமரேசன் அவரது நண்பருடன் அமர்ந்து வயல் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர், சிறிது நேரம் குமரேசனுடன் பேசிக் கொண்டிருந்த அவரது நண்பர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். தனியாக மதுபோதையில் இருந்த குமரேசனின் பார்வை அங்கு நடந்து சென்ற அந்த பெண்ணின் மீது பட்டுள்ளது. தொடர்ந்து, அவரிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற இளம் பெண் குமரேசனைத் திட்டி விட்டு வேகமாகச் சென்றிருக்கிறார். இதையடுத்து, தனது இரு சக்கரவாகனத்தில் துரத்திச் சென்று அந்த பெண்ணின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில், அந்த பெண் கீழே விழுந்துள்ளார்.

குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த பெண், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சி இருக்கிறார். அதனைச் சட்டையே செய்யாத குமரேசன், அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர், அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, அருகில் இருந்த ஒடையில் ரத்த கறை படிந்த தனது கையை கழுவிவிட்டு தப்பிச் சென்றதாக சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். குமரேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் ஜவுளிக்கடை உள்ளிட்ட பல கடைகளில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More : டூவீலரில் குட்கா பொருட்கள் சப்ளை..!! விபத்தில் சிக்கியதால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! எடப்பாடி அருகே பரபரப்பு..!!