தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறை நிலம் தொடர்பான விவகாரங்களை கையாண்டு வருகிறது. நிலப் பதிவு, பட்டா மாற்றம், அடங்கல், சிட்டா உள்ளிட்ட விவரங்கள் வருவாய் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வருவாய் துறையும் பத்திரப்பதிவுத்துறையில் இணைந்து டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒரு நிலத்தை விற்பனைக்கு காண்பித்து விட்டு, வேறு ஒரு சர்வே எண்ணை கிரையம் செய்து கொடுக்கும் மோசடி சம்பவங்களும் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்வே எண் மூலம் அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது? எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது? அதற்கான வரைப்படம் என அனைத்து விஷயங்களும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
அதன்படி, தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் வில்லேஜ் மாஸ்டர் என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் கூகுள் மேப் போன்று வரைபடம் மூலம் நமது வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். பின்னர், அந்த சர்வே எண்ணை https://eservices.tn. gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர், நில அளவுகள் மற்றும் நிலத்தின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் பத்திரப்பதிவு துறை கணக்கீட்டின் படி, சுமார் 446 கோடி சர்வே எண்கள் உள்ளன. அதில், வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் மட்டுமே இப்போது கொடுக்கப்பட்டுள்ளன. நகர்புறங்களுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்பட வில்லை. அப்படி, நகர்புறங்களுக்கும் கொண்டு வந்தால் நில மோசடிகள் என்பது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.