சேலம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் இ-வாடகை, தரிசு நில உழவு மானியம் மற்றும் மின்மோட்டார் பம்புகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது. இந்த துறையில் குறைந்த வாடகைக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பதிவு செய்ய விவசாயிகள் இ-வாடகை செயலியை உழவர் செயலி வழியாக அணுகி பயன் பெறலாம்.
மேலும் நிலத்தை சமன் செய்தல், சோளத்தட்டு அறுவடை, தென்னை மட்டையை தூளாக்கும் கருவி, விதை விதைத்தல், பயிர்களை கதிரடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் மணிக்கு ரூ.500 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இ-வாடகை செயலி வழியாக வாடகைக்கு இதுபோன்று மண் தள்ளும் இயந்திரம் (Bull Dozer) மணிக்கு ரூ.1230-க்கும், மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும் மணிக்கு ரூ.1,910-க்கும், JCB மணிக்கு ரூ.890-க்கும். தேங்காய் பறிக்கும் இயந்திரம் மணிக்கு ரூ.450-க்கும் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.
இவை அனைத்தும் இ-வாடகை செயலி மூலம் வீட்டில் இருந்தே முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்துறையில் நடப்பு 2024 – 25ஆம் நிதியாண்டில் 210.00 ஹெக்டர் பரப்பில் சிறுதானியம் சாகுபடிக்கு தரிசு நிலத்தில் உழவு மேற்கொள்ள மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 40% மானியம் ஒரு விவசாயிக்கு 2.00 ஹெக்டர் வரை அதிகபட்சமாக ரூ.5,400 வழங்கப்படும். நிலத்தடிநீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு, குறு விவசாயகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கிணறுகளுக்கும் புதிய மின்மோட்டார் பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு 50% அல்லது ரூ.15,000 எது குறைவோ அது மானியமாக வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Accident | லாரி மீது மோதிய அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ்..!! நோயாளி உள்பட 3 பேர் பரிதாப பலி..!!