சேலம் ஆட்டையாம்பட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ. ஆன கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள வீரபாண்டி, முன்சீப் தோட்டத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (94). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர், விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி ஜெகதாம்பாள் (87). இந்நிலையில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில், வயது முதிர்வின் காரணமாக ஜெகதாம்பாள் உயிரிழந்தார். இதனால் வேதனையடைந்த பெரியசாமி, மனைவியின் உடல் அருகிலேயே சோகத்துடன் அமர்ந்து இருந்தார்.
இதையடுத்து, நேற்று அதிகாலை 4 மணிக்கு, துக்கம் தாங்காமல் திடீரென பெரியசாமியும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பின்னர், இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் வைத்து, அஞ்சலி செலுத்தி ஒரே குழியில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.