சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை கூடுவது வழக்கம். வழக்கமான மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் தளமாக இருந்தாலும் கூட, இறைச்சிக்கான ஆடு விற்பனைக்கு இந்த சந்தை பெயர் பெற்றதாகும். சேலம், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடு, கோழிகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்று (டிசம்பர் 28) கூடிய சனி சந்தைக்கு சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 12,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வரும் புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு என்பதால், சந்தையில் வியாபாரம் களைகட்டியது. 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5,600 முதல் ரூ.8,000 வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.11,000 முதல் ரூ.16,400 வரையும், 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.16,500 முதல் ரூ.25,000 வரையும் விலை போனது. வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையும் விற்கப்பட்டது.

இவை தவிர பந்தய சேவல், கோழிகள், காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது. இதில் கோழி மற்றும் பந்தைய சேவல் ரூ.150 முதல் ரூ.2,500 வரை விலை போனது. இன்று கூடிய சந்தையில் மொத்தம் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், இந்த சந்தையில் இன்று மட்டும் 9,300 ஆடுகள் விற்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

Read More : உரிய ஆவணங்களை காட்டியும் பணம் கேட்ட போலீஸ்..? இரும்பு ராடால் தாக்கிய வடமாநிலத்தவர்கள்..!! மேட்டூர் சோதனைச் சாவடியில் நடந்தது என்ன..?