டேங்கர் லாரி மோதியதில் பள்ளி சிறுமி ஒருவர் உயிரிழந்தச் சம்பவம் கோவில்பட்டி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் வழக்கறிஞராக உள்ளார். அவர் தனது உறவினர்களான ஜெயபாண்டியின் மனைவி வெண்ணிலா, அவர்களது மகள்கள் ஏஞ்சல் ஆராதியா (வயது 9), ஆசினியா (வயது 7) ஆகியோரை கல்லுப்பட்டியில் இருந்து பேருந்து ஏற்றிவிட பேருந்து நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், பசுவந்தனை சாலையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், 5ம் வகுப்பு சிறுமி ஏஞ்சல் ஆராதியா லாரிக்குள் விழுந்து, அதன் டயர் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் வழக்கறிஞர் பரமசிவம், வெண்ணிலா, மற்றும் 3ம் வகுப்பு படிக்கும் இளைய மகள் ஆசினியா ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிறுமி ஏஞ்சல் ஆராதியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி டிரைவர் ஆறுமுகச்சாமி. இவர் சிவந்திபட்டியை சேர்ந்தவர். இவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பசுவந்தனை சாலை பகுதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், வாகனங்கள் சென்றுவர பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், சாலை ஆக்கிரமிப்புகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதன் விளைவாகவே இப்போது ஒரு சிறுமியின் உயிர் பறிபோயுள்ளது என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Read More : பீதியை கிளப்பிய “அன்னாபெல் பேய் பொம்மை”..!! திடீரென மாயமானதால் மக்கள் அதிர்ச்சி..!!