எடப்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது உறவு முறையான 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரியவந்ததால், இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி ஈஸ்வரன் கோயிலில் பூபதியும், சிறுமியும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி தற்போது கர்ப்பமாக இருந்த நிலையில், பிரசவ வலி ஏற்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 24ஆம் தேதி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து, சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகாததால், அரசு மருத்துவமனை நிர்வாகம் சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு இதுகுறித்து புகாரளித்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பூபதி மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.